Advertisement

கல்யாணத்தில் போடுகிற மாதிரி ‘கருணைக்கிழங்கு வறுவல்’ ஈஸியா வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

கல்யாணத்தில் போடுகிற மாதிரி ‘கருணைக்கிழங்கு வறுவல்’ ஈஸியா வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

நாம வழக்கமா வீட்டில் செய்கிற கருணைக்கிழங்கு வறுவலுக்கும், கல்யாண வீட்டில் போடுகின்ற கருணைக்கிழங்கு வறுவலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். எப்படி தான் இதை செய்கிறார்களோ? என்கிற குழப்பமும், ஆர்வமும் பந்தியில் சாப்பிடும் போது நமக்கு அதிகமாகவே இருக்கும். இந்த வறுவல் வேற கறியையே மிஞ்சுகிற டேஸ்டுக்கு இருக்கும். வாயில் ஜலம் ஊறாத குறை தான். ஆனா இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க! ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு விஷயம் தான். சுலபமா நம்ம வீட்டிலேயே அந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

karunai-kizhangu

கருணைக்கிழங்கு என்றாலே நாக்கு அரிக்கும் என்று பயப்படுபவர்கள் நிறைய பேர் உண்டு. மற்ற கிழங்குகள் சமைத்தால் வாயுத்தொல்லை இருப்பது போல் கருணைக்கிழங்கு சமையலில் இந்த பிரச்சனை இல்லை. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய கருணைக்கிழங்கை தாராளமாக பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். நாக்கு அரிக்காமல் இருப்பதற்கு புளித் தண்ணீரில் கருணைக்கிழங்கை ஊற வைத்தால் போதும். அதற்காக இதை தவிர்க்க வேண்டாம். இப்போது நாம் அரைகிலோ கருணைக்கிழங்கு எடுத்துக் கொள்வோம்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். புளி நன்கு ஊறியதும், அதில் சுத்தமாக தோல் நீக்கி சதுரம் சதுரமாக வெட்டிய கருணைக்கிழங்குகளை போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் புளித்தண்ணீரில் அப்படியே ஊறவிடுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வையுங்கள். சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் அதில் வடிகட்டி எடுத்த கருணைக்கிழங்குகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கருணைக்கிழங்கு அரைவேக்காடு வெந்ததும் தண்ணீரை முழுமையாக வடித்து ஆறவிடுங்கள்.

karunai-kizhangu-fry

பின்னர் கருணைக் கிழங்கில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலும் வற்றியதும் சூடான எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதற்கு அதிக நேரம் பிடிக்காது. இரண்டு நிமிடத்தில் முறுகலாக பொரிந்துவிடும். அதன் பின்னர் கருணைக்கிழங்கு வறுப்பதற்கு தேவையான அளவிற்கு உப்பு, இரண்டு ஸ்பூன் – தனி மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் – தனியாத்தூள், கால் ஸ்பூன் – கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் கிழங்கில் இறங்க வேண்டும் எனவே ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள்.

karunai-kizhangu-fry1

அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வர மிளகாய் – ஒன்று, நசுக்கிய பூண்டு – நான்கு தாளித்தம் செய்து கருணைக்கிழங்குகளை போட்டு ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு பிரட்டி பிரட்டி எடுக்க வேண்டும். மசாலா வாசனை போக கருணைக்கிழங்கு வறுவல் மிக மிக சுவையாக இப்போது தயாராகிவிடும். கால் ஸ்பூன் – சோம்பு எடுத்துக்கொண்டு லேசாக இடித்து தூவி விடவும். அவ்வளவுதான். ஆரோக்கியமான சுவையான கல்யாண வீட்டில் செய்வது போல் கறி சுவையுடன் இருக்கும் கருணைக்கிழங்கு வறுவல் சாப்பிடுவதற்கு ரெடியாக இருக்கும். இதுல நாலு பீஸ் போதுங்க, தட்டு நிறைய சோறு வச்சாலும் நிமிஷத்துல காலி ஆயிடும். அவ்வளவு சுவையாக இருக்கும்.