Advertisement

மோர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

மோர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

நமக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீருக்கு அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் பலவிதமான குளிர்பானங்கள் வந்துவிடவே நம் உடலுக்கு நன்மையை தரும் மோரினை சில நாட்களாக நாம் மறந்து வருகின்றோம். நம் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் தராமல், தாகத்தை தனித்து உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கும் மோரின் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.

buttermilk

வயிற்றை குளிரச் செய்கிறது

நம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்து விடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது, வயிறு எரிச்சலில் அவதிப்பட்டு வருவோம். இதனை சரிசெய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும்.

செரிமானத்திற்கு

தயிரினை நாம் உண்ணும் மதிய உணவில் கடைசியாக சாப்பிடுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் தயிரில் செரிமானத்திற்கு தேவையான புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோர் ஆக்கும் போதும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராக்கப்படும். வயிறு உப்புசம், அசௌகரியமும் சரியாகிவிடும்.

buttermilk

தேவையற்ற கழிவுகள் வெளியேற

நாம் உண்ணும் உணவின் சக்தியை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2 அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் இருக்கிறது. இது நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்துகிறது. நம்மை அறியாமல் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஏதாவது, நம் உடலுக்கு சேராத விஷத்தன்மை இருந்தாலும் கூட அதனை மோர் நீக்கிவிடுகிறது. இது தவிர தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரி செய்யப்படுகிறது.


முக அழகுக்கு

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.

buttermilk

நீர்ச்சத்து அதிகரிக்கும்

மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.

லாக்டோஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு

சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாது. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடல் ஜீரணித்துக் கொள்ளாது. அப்படிப்பட்டவர்களை ‘லாக்டோஸ் இன்டோலரன்ஸ்’ என்று கூறுவார்கள். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்ணாமல் உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் மோரினை குடிப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தை பெறலாம்.

buttermilk

எடை குறைக்க

எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தான் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சராசரி அளவை குறைத்துக் கொண்டே வருவார்கள். இதனால் நமக்கு உடலில் உள்ள நீர்சத்து குறைந்து சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நாம் மோரினை குடித்து பசியை ஆற்றிக் கொள்ளலாம். இது சுலபமாக ஜீரணமாகிவிடும். மோர் குடிப்பதால் எடையும் கூடாது. மோரில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது. புரதம் நம் உடலில் சேரும்போது, நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும்

நார்ச்சத்து உள்ள பொருட்களை நாம் அதிகம் சாப்பிடும் சமயத்தில் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து  மோர் குடித்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

buttermilk

இரத்த அழுத்தம் குறைய

மோரில் பயோ ஆக்டிவ், புரோட்டின், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் இந்த பொருட்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வர நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்கிறது மருத்துவம்.

அசிடிட்டி

நம்மில் பலபேர் அசிடிட்டி வந்துவிட்டால் அசிடிட்டி டானிக்கை தான் தேடுவோம். ஆனால் நம் வீட்டிலேயே உள்ள வைத்தியம் தான் மோர் அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர, சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன் மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து அந்த விருதினை சிறிது, மோரில் கலந்து குடித்தால் போதுமானது. அசிடிட்டி பிரச்சினை தீர்ந்துவிடும்.

 buttermilk

மூலநோய், வயிற்றுப்போக்கு

மூல நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப் போக்கினை மோர் கொடுத்து சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் லேசாக சூடுபடுத்தி சிறிது மஞ்சள் தூள் கலந்து கொடுத்தால் சளி பிரச்சனை வராது.

மாதவிடாய் நாட்களில்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி, இரத்தப்போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதுமானது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும்.

இப்படி நம் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும் மோருக்கு பயன்கள் ஏராளம். பல நல்ல குணங்களை உடைய மோரினை மறக்காமல் தினசரி நம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.