Advertisement

வெற்றிலை நன்மைகள்

வெற்றிலை நன்மைகள்

நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவு பழக்கம் தான் முதன்மையான காரணம் ஆகும். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகள், நோய்கள் போன்றவற்றை தீர்க்கலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

வெற்றிலை நன்மைகள்

வலி நிவாரணி

வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும். வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.

வாயுத்தொல்லை

உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகும். இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.

பற்கள் மற்றும் ஈறுகள் நலம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும், இறுதியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகமிருந்தது. தற்காலங்களில் அதை பெரும்பாலானோர் மறந்து விட்டனர். பலவகையான உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் பாதகமான பொருட்கள், உணவு துணுக்குகள் போன்றவை பல்லிடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

சுவாச நோய்கள்

குளிர்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவுகளால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும், ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது வெற்றிலை. நுரையீரலில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் காலங்களில் ஒன்றிரண்டு வெற்றிலைகள் எடுத்து, அதில் கடுகு எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி உங்கள் நெஞ்சில் சிறிது நேரம் வைத்து எடுத்து வர சுவாசிப்பதில் இருக்கின்ற சிரமங்கள் நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

vethalai 2

கிருமி நாசினி

வெற்றிலை இயற்கையிலேயே மனிதர்களின் உடல்நலத்திற்கு உதவும் இயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட ஒரு பயிர் செடியாகும். தொற்று கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை சாறுகளை அருந்துவது அந்நோய்க்கிருமிகள் அழிய உதவும். காயங்கள், ஆறி வரும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர அதிலிருக்கும் கிருமிகள் அழியும், வலி எரிச்சல் போன்றவற்றை குறைக்கும்.

சிறுநீர் பெருக்கி

முதியவர்கள் மற்றும் சிறுநீரக உறுப்புகளில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் வெற்றிலை சாற்றை அவ்வப்போது பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தமான உறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்கும். சிறுநீர் அதிகளவு பெருகி சீரான கால இடைவெளியில் சிறுநீர் கழிக்கச் செய்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

vethalai 5

தலைவலி

ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்றவகையான உடல்நல பிரச்சனைகளாலும் சிலருக்கு தலைவலி உண்டாகிறது. தலைவலி ஏற்பட்ட சமயங்களில் வெற்றிலைகளை நன்கு கசக்கி அதன் சாறு அருந்துவதால் உடனடியாக தலைவலி குறையும். மேலும் வெற்றிலைகளை நெற்றியில் வைத்து, ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும் போது தலைவலி முற்றிலும் நீங்கியிருக்கும்.

காதுகள்

குளிர்காலங்களில் சிலருக்கு காரணமாக காதுகளில் வலி ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு காதுகளில் வலி மற்றும் குடைச்சல் உணர்வுகள் ஏற்படும். இச்சமயங்களில் சிறுது வெற்றிலைகளை கொண்டு வந்து நன்றாக அரைத்து அதன் சாறுகளை இரண்டு காதுகளிலும் இடுவதால் காது வலி குறையும், காது குடைச்சல்கள் நீங்கி காதுகளில் இருக்கின்ற கிருமிகளையும் அழிக்கும்.

vethalai 3

செரிமான சக்தி

நாம் உண்ணும் உணவுகள் நன்கு செரிமானம் ஆனால் மட்டுமே உடலுக்கு தேவையான சக்திகள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். வெற்றிலைகள் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள் வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கிறது.

எலும்புகள்

அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் எலும்புகளில் இருக்கும் காரைகள் மிகவும் வலுவடைந்து, கீழே விழுவதாலோ அல்லது வேறு ஏதாவது விபத்தின் போதோ எலும்புகள் சுலபத்தில் உடையாமல் பாதுகாக்கிறது.