Advertisement

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

பெரும்பாலான இயற்கை மருத்துவ முறைகளில் அதிக அளவு மூலிகைகள், செடி கொடிகளை மருந்துகளாக பயன்படுத்தினாலும் சமயங்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் சில பொருட்களும் நோய்களை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே மீன் எண்ணெய் மாத்திரைகளை உடல் நலம் பெறுவதற்கு மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிட்டு வரும் வழக்கம் இருக்கிறது. இந்த மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் பெறப்பட்டாலும், அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன. அத்தகைய மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர்களின் அறிவுரையோடு சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

fish-liver-oil

மீன் எண்ணெய் மாத்திரை பயன்கள்

குழந்தைகள் மருத்துவம் 

மற்ற மீன் வகைகளை போலல்லாமல் பண்ணா மீன் ஈரல் இயற்கையிலேயே அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் டி சத்துக்களை கொண்டதாக இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த பண்ணா மீனின் ஈரலில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரை பன்னெடுங்காலமாகவே மேலைநாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும் வலுக்குறைந்த எலும்புகள் குறைபாட்டை போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும் பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கும் சிறந்த நிவாரணமாக இந்த மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது.

உள்காயங்கள், வீக்கங்கள் குணமாக 

உள்காயம் மற்றும் வெளிக்காயத்தின் போது உடலில் வீக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த வீக்கம் என்பது அடிப்பட்ட இடங்களில் வெளிப்புற கிருமிகள் பாதிக்காமல் இருக்க இயற்கையாக நிகழும் ஒரு நோயெதிர்ப்பு செயலாக இருக்கிறது. அதே நேரம் அளவு கடந்த காலத்திற்கு வீக்கம் இருப்பது உடலுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளையும், நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதை சாப்பிடுபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே உடலில் வீக்கங்கள் எங்கிருந்தாலும் அவை குறைகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் இருக்கின்ற ப்ரீ ராடிக்கல்ஸ் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி, வீக்கங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

fish-liver-oil

எலும்புகள் உறுதி பெற 

பொதுவாக ஆண், பெண் அனைவருமே முப்பது வயது தாண்டிய உடனே அவர்களின் எலும்புகள் வலிமை குறைய தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு எலும்புகள் மிகவும் வலிமையிழப்பதாக அந்த ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். எனவே 30 வயதைக் கடந்த ஆண்களும், பெண்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் அதிலிருக்கும் வைட்டமின் டி சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கால்சியம் சத்துக்களோடு சேர்ந்து உடலின் எலும்புகளை வலிமை அடைய செய்து உடலுக்குக் கூடுதல் பலத்தை தரவல்லதாக இருக்கிறது.

ஆர்த்ரைடிஸ் 

ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுகளின் வலி இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு உடல் நலக் குறைவாக இருக்கிறது. மேலைநாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் ஆர்த்தரைடீஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு தினமும் ஒரு மீன் எண்ணெய் மாத்திரை வீதம், மூன்று மாதங்களுக்கு கொடுத்து வந்ததில் அவர்களுக்கு ஏற்படும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் மற்றும் காலையில் கை, கால் மூட்டுக்களில் ஏற்படும் விரைப்புத் தன்மை வெகுவாக குறைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. எனவே மூட்டுவலி, கீழ்வாதம் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால் மேற்கூறிய ஆர்த்தரைடீஸ் பிரச்சனை குணமாக வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

fish-liver-oil

கண்கள் நலமாக இருக்க 

உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதய நோய்கள் காரணமாக உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பார்வைத்திறனை இழப்பதாக உலக மருத்துவ கூட்டமைப்பு தெரிவிக்கிறது. கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்து கண்களில் ஏற்படும் திசு வளர்ச்சி குறைவு மற்றும் செல்களின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, கண்பார்வையை காக்கிறது. மேலும் கண் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கண் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வை மங்குதல் குறைபாட்டையும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வருவதால் நீக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க 

ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அந்நாட்டு மக்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படாததற்கு காரணம் அவர்கள் மீன் உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கண்டறிந்துள்ளனர். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் மீன் எண்ணெய் மாத்திரைகள் ஒன்றாகும். இதில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரோலை சேராமல் தடுத்து, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தொடர்பு கொள்ளும் நரம்புகளில் அடைப்பு ஏற்படாமல் காத்து இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து மாரடைப்பு, இதயத் துடிப்பு குறைதல் போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

fish-liver-oil

மன அழுத்தம் நீங்க 

மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றிற்கு உடலின் மூளைப் பகுதியில் செரோட்டோனின் எனப்படும் வேதிப்பொருள் குறைவாக சுரப்பது காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய மனோ ரீதியான பிரச்சனைகளில் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிட்டு வருவதால் அதில் நிறைந்திருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி சத்து மூளையில் செரட்டோனின் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளை போக்கி மனதை அமைதியாக்கி படபடப்பு தன்மையை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சர் குணமாக 

பெரும்பாலும் காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பவர்களுக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்கள் ஏற்படுகின்றது. ஆரம்ப காலத்தில் இந்த அல்சர் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் பிற்காலங்களில் அடிக்கடி வாந்தி எடுத்தல், உணவு செரிமானம் ஆகாமல் செரிமான அமிலங்கள் சீரற்ற சுரப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். அல்சர் புண்களை குணமாக்குவதற்கு ஒரு சிறந்த மருந்தாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும். மேலும் உணவை நன்றாக ருசித்து சாப்பிட உதவுகிறது. சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்கிறது.

fish-liver-oil

சரும பாதுகாப்பு

கோடைகாலங்களில் நமது உடலில் வெப்பத்தால் அதிகம் சுட்டெரிக்கப்படுவது நமது சருமம் தான். சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதா கதிர்கள் அதீத அளவில் நமது தோலில் பட்டுக்கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தோல் புற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. மீன் எண்ணெய் மாத்திரையை மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிடும் நபர்களுக்கு வைட்டமின் – டி சத்து அதிகம் கிடைக்க பெற்று வெளிப்புற தோலின் ஈரத்தன்மையை நீண்ட நேரம் நீடிக்க செய்கிறது. மேலும் தோலுக்கு வழவழப்பை தந்து, தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை உண்டாக்குகிறது. தோல் புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

மூளை வளர்ச்சி 

மீன் எண்ணெய் மாத்திரைகளில் வைட்டமின் மற்றும் நன்மை தரும் கொழுப்பு சத்துகள், கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. மேலும் இந்த நமது உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்து மூளைக்கு சத்துக்கள் அதிகளவு செல்வதை உறுதி செய்து, மூளை எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஞாபகத்திறனை அதிகரிக்கிறது. கவனம் செலுத்தும் தன்மையை கூர்மையாக்குகிறது. அல்சைமர் போன்ற ஞாபகமறதி நோய்கள், குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.