Advertisement

தினை பயன்கள்

தினை பயன்கள்

நாம் இக்காலங்களில் வழக்கமாக சாப்பிடும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்த்து பல வகையான சிறு தானியங்களை உணவாக உட்கொள்வது நல்லது. சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டிருக்கிறது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினை தானியத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று அறிய முடிகிறது. அப்படி பட்ட தினை தானியத்தின் பல்வேறு பயன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

thinai 1

தினை பயன்கள்

நார்ச்சத்து

தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.

ஆண்மை குறைபாடு

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

thinai 3

புரதம்

உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

மன அழுத்தம்

அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது. தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.

millet 5

ஞாபக மறதி

அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதயம்

தினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும் ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

thinai 4

ஜுரம்

உடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிப்பதாலும், நோய் தொற்றுகளாலும் ஜுரம் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீன படுத்தும் காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன. ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்ற்வவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்.

எலும்புகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தினை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட ஒரு தானியமாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.

thinai 2

நீரிழிவு

நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் தினை உணவனுகளை சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.

கொலெஸ்ட்ரால்

தினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.