Advertisement

சுவையான, ஆரோக்கியமான பூண்டு குழம்பு! வித்தியாசமான முறையில், ஒரு வாட்டி இப்படி வெச்சு பாருங்க! மதியம் வெச்ச சாப்பாடு, மிச்சம் ஆகவே ஆகாது.

சுவையான, ஆரோக்கியமான  பூண்டு குழம்பு! வித்தியாசமான முறையில், ஒரு வாட்டி இப்படி வெச்சு பாருங்க! மதியம் வெச்ச சாப்பாடு, மிச்சம் ஆகவே ஆகாது.

நிறையபேர் வீட்ல பூண்டு குழம்பு செய்வாங்க. ஆனா, அந்த பூண்டை முழுசாக எண்ணெயில் போட்டு வதக்கி செய்வார்கள். சிலபேர் அந்த பூண்டை சாப்பிடாமல், ஒதுக்கி வைத்துவிடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக அந்த பூண்டை அரைத்து பூண்டு குழம்பு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வித்தியாசமான சுவையில் காரசாரமான பூண்டு குழம்பு வைப்பது எப்படி பார்க்கலாம் வாருங்கள்!

poondu-kozhambu

பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்-4 டேபிள்ஸ்பூன், கடுகு அல்லது வெங்காய வடகம்-தாளிக்க சிறிதளவு, சின்ன வெங்காயம்-10 தோல் உரித்தது, தக்காளி-1 பழுத்தது (சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளவும்), வெந்தயம்-கால்ஸ்பூன், கறிவேப்பிலை-ஒரு கொத்து, பெருங்காயம்-1/4 ஸ்பூன், புளி-பெரிய எலுமிச்சை பழம் அளவு, பூண்டு-15 லிருந்து 20 திரி வரை தோலுரித்து எடுத்துக்கொள்ளலாம், மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள்-1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன். (மசாலா பொருட்கள் கலந்த சாம்பார் பொடி பயன்படுத்தக் கூடாது.)

உங்கள் வீட்டிலேயே இருக்கும் தடிமனான கடாயை எடுத்துக்கொள்ளுங்கள். வத்த குழம்பு, கார குழம்பு, பூண்டு குழம்பு, இப்படி குழம்பு வகைகள் செய்யும் போது, கடாயில் வைத்தால் தான் அதிக சுவை கொடுக்கும். முடிந்தவரை கிண்ணத்தில் குழம்பு வைப்பது தவிர்த்துக் கொள்ளவும்.

garlic kolambu

அடுப்பில் தடிமனான கடாயை வைத்து விட்டு, 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் உங்கள் வீட்டில் வெங்காய வடகம் இருந்தால் போடலாம். இல்லாதவர்கள் முதலில் கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு நன்றாக பொரிந்ததும், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பு நறுக்கிய தக்காளி பழத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக பெருங்காயத்தூள் போட்டு, தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கி, புளி கரைசலை ஊற்ற வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயம். புளிக்கரைசல் மிகவும் கட்டியாக இருக்கக்கூடாது. நீர்ம தன்மையோடு தான் புளிக்கரைசலை கரைத்துக் கொள்ள வேண்டும். காரணம் புளி கரைசல் நன்றாக கொதித்து, பச்சை வாடை போக சுண்ட வேண்டும். அப்போதுதான் குழம்பின் ருசி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

puli-karaisal

சரி. புளியை கரைசலை, ஊற்றிய பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அடுப்பை வேகமாக வைத்து குழம்பு தளதளவென்று நன்றாக 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதன்பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை குழம்பை திறந்து, ஒரு முறை கிளறி விட வேண்டும். குழம்பு ஒரு பக்கம் கொதிக்கட்டும்.

இப்போது உறித்து வைத்திருக்கும் பூண்டு திரிகளை ஒரு பாத்திரத்திலோ அல்லது குக்கரில் போட்டு, 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது பூண்டு நன்றாக வேக வேண்டும். பூண்டை மத்து போட்டுக் கடையும் போது மைய அறைய வேண்டும். கடைய முடியாதவர்கள், அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். பூண்டை அரைக்கும்போது போது, பேஸ்ட் மாதிரி இருக்கக்கூடாது. கொஞ்சம் தண்ணியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

garlic

அடுப்பில் அந்த குழம்பானது நன்றாக மிதமான தீயில் கொதித்து கொண்டிருக்கிறது அல்லவா? அந்த குழம்பு முக்கால்வாசி தயாரானதும், அதில் அரைத்து வைத்திருக்கும் பூண்டை ஊற்ற வேண்டும். மீண்டும் குழம்பை திறந்தபடியே 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் கொதித்த பின்பு, குழம்பிற்கான உப்பு, காரம், புளி சரிபார்த்து, போட்டு விட வேண்டும். (அடுப்பு மிதமான தீயில் தான் இருக்க வேண்டும். அதிகப்படியான தீயை வைத்து கொதிக்க விடும் பட்சத்தில் குழம்பு நீர்த்துப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.)

குழம்பு முழுமையாக தயாராகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? குழம்பில் இருந்து நீங்கள் ஊற்றிய நல்லெண்ணெய்  தனியாக பிரிந்து மிதக்க வேண்டும். தண்ணீர் நிலையில் இருக்கும் புளியானது நன்றாக கொதித்து சுண்டி குழம்பாக மாறுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மல்லித்தழை தூவி குழம்பை இறக்கி வைத்தீர்கள் என்றால், வாசனையானயான ஆரோக்கியமான, பூண்டு குழம்பு தயார்.

poondu-kozhambu2

யாரும் பூண்டை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்க முடியாது. வாரத்திற்கு 2 முறை இந்த குழம்பை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கூட வெறும் வத்தல் வச்சு, சாப்பாடு பரிமாறி பாருங்க! மதியானம் நீங்க வடிச்ச சாப்பாடு, உங்களுக்கே மிச்சம் இருக்காது. அவ்வளவு சீக்கிரம் காலியாகிவிடும்.

பின்குறிப்பு: பூண்டு குழம்பில் போடும் உப்பு காரம் தூக்கலாக இருக்க வேண்டும். அப்போதுதான் பூண்டின் இனிப்பு சுவை தெரியாது. புளியை நன்றாக கரைத்து கொஞ்சம் தண்ணீர் தன்மையில் ஊற்றவேண்டும். புளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், இவைகள் அனைத்தும் நன்றாக மிதமான மிதமான தீயில் வேகும் பட்சத்தில் குழம்பின் சுவை அதிகரிக்கும். குழம்பு நன்றாக சுண்டி, தொக்கு பக்குவத்திற்கு போகக்கூடாது. குழம்பை கரண்டியில் எடுத்து ஊற்றும் பக்குவத்தில் இறக்கி விட வேண்டும்.